சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்க கல்வி துறையில் மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்) ஜூலை 2-ல் நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியம் கல்வி மாவட்டத்துக்குள் ஜூலை 3-ம் தேதியும், வருவாய் மாவட்டத்துக்குள் ஜூலை 4-ம் தேதியும் நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 5-ல் தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 19, 21-ம் தேதிகளிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22, 23-ம் தேதிகளிலும் நடத்தப்படும்.
மேலும், பட்டதாரி ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். இதுதவிர, இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வான நபர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்துவதற்கான மின் இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி உள்ளிட்டஅனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.