சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அத்துடன் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைகிறது.
இந்நிலையில் பல்கலை.யின் 4 வளாக கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ல் தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்குமுன் மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 5 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.
இதேபோல், பல்கலை. இணைப்பு அங்கீகாரம் இதர கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரையும், இவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.