மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 50 பேர் இருந்ததாகத் தகவல்.
இது குறித்து ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், “விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் உடற்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
உள்ளூர் அதிகாரிகள், “இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” என தெரிவித்தனர்.
50 பேர் பலி?! ரஷ்ய-சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டின்டா நகரத்திற்குச் சென்ற விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். 50 பேருடன் சென்ற இந்த பயணிகள் விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்றபோது ரேடாரில் இருந்து காணாமல் போனது. இதனை அமூர் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் உறுதி செய்துள்ளார்.
சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், டின்டா விமான நிலையத்தை நெருங்கும் போது ரேடாரில் இருந்து மாயமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.