வாஷிங்டன்: வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினார். இதற்கு அனைத்து நாடுகளும் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து, பல்வேறு விதமான வரி விகிதங்களை மாற்றி 90 நாட்களுக்கு தற்காலிக அடிப்படை வரியாக 10%-ஐ நிர்ணயித்து ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்த காலக்கெடு முடிவடைவதற்குள் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பல்வேறு நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தின. பிரிட்டன் உடனான பேச்சுவார்த்தை மட்டுமே முடிவுக்கு வந்தது. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி உயர்வு மட்டும் விதிக்கப்படும் என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்பட பல நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
90 நாட்கள் காலக்கெடு ஜூலை 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்குள் ஒப்பந்தத்தை மேற்கொள்ள பல நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், நியூ ஜெர்சி செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “12 நாடுகளுக்கான வரி கடிதங்களில் கையெழுத்து இட்டுவிட்டேன். அந்த நாடுகள் எவை எவை என்பது திங்கள் கிழமை வெளியிடப்படும். இதை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்பதே அமெரிக்காவின் அணுகுமுறையாக இருக்கும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு வரி விகிதம் அதிகரிக்கப்படும். அது அதிகபட்சம் 70% வரை இருக்கும். புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்.” என தெரிவித்துள்ளார்.