தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியாஞின் நகரில் நடந்தது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து ரஷ்யா – இந்தியா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு இருவரும் ஒன்றாக காரில் சென்றனர். அது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மோடி, “இந்திய – ரஷ்ய இருதரப்பு ஆலோசனைக்காக நானும், புதினும் ஒரே காரில் பயணிக்கிறோம். அவருடனான ஆலோசனைகள் எப்போதுமே ஆழமான புரிதலைக் கொண்டவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்தது. அதற்கு ரஷ்யாவுடனான நட்பை, அங்கிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டியது. இந்நிலையில், ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக, “சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது” என்று ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அமர்ந்திருந்த போதே பாகிஸ்தானை மறைமுகமாக சாடி பிரதமர் மோடி பேசினார்.