ஹனோய்: வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
உலக அளவில் வியட்நாம் சுற்றுலா சார்ந்து பிரபலமான பயண இடங்களில் (டெஸ்டினேஷன்) ஒன்றாக அறியப்படுகிறது. வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஹலாங் பே (Halong Bay) விரிகுடா பகுதி உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று 53 பேருடன் சுற்றுலா படகு ஒன்று கடல் பகுதியில் அந்த நாட்டின் நேரப்படி மதியம் 2 மணிக்கு சென்றது.
அப்போது திடீரென வீசிய சூறைக்காற்று காரணமாக அந்த படகு கவிழ்ந்தது. இதில் படகில் பயணித்தவர்கள் கடலில் விழுந்துள்ளனர். 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என தகவல். 14 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் காற்று வேகமாக வீசுவதாகவும், இடி மின்னலுடன் மழை பொழிந்து வருவதாகவும் தகவல். ஹலாங் பே பக்திக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம். அங்கு கடலில் படகுகளில் பயணித்து இயற்கையை ரசிப்பார்கள். இந்நிலையில்தான் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.