போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட்&டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார்.
அரசுமுறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை, பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக இன்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் வந்தார். 1999-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் அடையாளமாக, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, டிரினிடாட் & டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அந்நாட்டின் அமைச்சர்கள் வரவேற்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் நடத்திய விருந்தில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும், பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவிலிருந்து எடுத்துவந்த புனித நீரையும் நான் வழங்கினேன். இவை இந்தியாவிற்கும் டிரினிடாட் & டொபாகோவிற்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மிக பிணைப்புகளை அடையாளப்படுத்துகின்றன’ எனக் குறிப்பிட்டார்
இதனை தொடர்ந்து டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரை ‘பிஹாரின் மகள்’ என்று அழைத்தார், மேலும், கமலா பெர்சாத்தின் மூதாதையர்களுக்கு பிஹாருடன் உள்ள உறவுகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.
At the dinner hosted by Prime Minister Kamla Persad-Bissessar, I presented a replica of the Ram Mandir in Ayodhya and holy water from the Saryu river as well as from the Mahakumbh held in Prayagraj. They symbolise the deep cultural and spiritual bonds between India and Trinidad &… pic.twitter.com/ec48ABwWdB
— Narendra Modi (@narendramodi) July 4, 2025