லுப்லியானா [ஸ்லோவேனியா]: மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார்.
ஸ்லோவேனியாவின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சருமான டான்ஜா ஃபாஜோனை சந்தித்த பிறகு, நேற்று லுப்லியானாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வாங் யி, ” சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. மேலும் சீனா, அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு மோதல்களுக்கு அரசியல் தீர்வை உருவாக்கவும் முயற்சிக்கிறது.
உலகில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், பலதரப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை கூட்டாகப் பாதுகாக்கவும் வேண்டும். தற்போதைய சூழலில், சர்வதேச நிலைமை பின்னிப்பிணைந்த குழப்பம் மற்றும் தொடர்ச்சியான மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவும் ஐரோப்பாவும் போட்டியாளர்களாக இல்லாமல் நண்பர்களாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் மோதுவதற்குப் பதிலாக ஒத்துழைக்க வேண்டும். ஒரு நூற்றாண்டில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு மத்தியில் சரியான தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இது இரு தரப்பினருக்குமான பொறுப்பு ஆகும்” என்றார்
முன்னதாக, நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனா மீது நேட்டோ நாடுகள் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதித்தால், ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று வலியுறுத்தினார். இந்த சூழலில், சீனா வெளியுறவு அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.