சென்னை: பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கைக்கு கவனம் செலுத்துவோர்க்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், எந்த மாதிரியான செயல்களை / முடிவுகளை அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்று கருதுகிறார் என ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை.
இதுதவிர ட்ரம்ப் பகிர்ந்த மற்றொரு பதிவில், “அமெரிக்க நிர்வாகம் இன்றிரவு முதல் புதிய வரி விதிப்பு மற்றும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பும் என்று தெரிவித்தார். இன்றிரவு 9.30 மணியளவில் முதல்கட்ட கடிதங்கள் அனுப்பப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரிக்ஸ் தலைவர்கள் இணைந்து ரியோ டி ஜெனிரோ பிரகடனத்தை வெளியிட்டனர். அதில், கட்டற்ற வரிவிதிப்பு சர்வதேச வர்த்தகத்துக்கு ஆபத்தானது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பிரகடனத்தில் வரி விதிப்புடன் தொடர்புபடுத்தி அமெரிக்கா, டொனால்டு ட்ரம்ப் என்று வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.