பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து சீன பொருட்கள் இறக்குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் ரஷ்யா, உக்ரைன் இடையிலான அபாயகரமான போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நான் நம்புகிறேன். ரஷ்யாவிடமிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறது. எனவே, கூடுதல் வரி விதித்தால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை சீனா நிறுத்திவிடும்’’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஸ்லோவே னியா சென்றிருந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகாரங்கள் துறை அமைச்சருமான டன்ஜா பஜோனை சந்தித்துப் பேசினார். பின்னர் லுப்லியானா நகரில் வாங் யி கூறும்போது, “வர்த்தக போரில் பங்கேற்க சீனா விரும்பவில்லை. அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் சீனாவின் விருப்பம். சீனாவும் ஐரோப்பிய நாடுகளும் போட்டியாளர்களாக இல்லாமல், நட்பு நாடுகளாக இருக்க வேண்டும். மோதலுக்கு பதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.