காத்மாண்டு: நேபாள நாட்டில் ‘ஜென் ஸி’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி(73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல், இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்க, போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்க அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அதன் காரணமாகவே, இடைக்கால அரசை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இடைக்கால பிரதமராக சுசீலா கார்கியை தேர்வு செய்ய நேபாள அதிபர் பவுடேல் நேற்று ஒப்புகொண்டுள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தை கலைத்து நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்யவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
காத்மாண்டுவில் உள்ள அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்க ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுக்கொண்டார்.