பெங்களுரு: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 – டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலத்தில் மொத்தம் 7,244 இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் சுமார் 25% பேர் (1,703) ட்ரம்ப் அதிபரான 6 மாத காலத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் சிலர் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்று அமெரிக்க அரசை மத்திய அரசு வலியுறுத்தியது.
இந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 1,703 பேரில் அதிகபட்சமாக பஞ்சாபைச் சேர்ந்த 620 பேர் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஹரியானா (604), குஜராத் (245), உத்தர பிரதேசம் (38) மற்றும் கோவா (26), மகாராஷ்டிரா (20), டெல்லி (20), தெலங்கானா (19), தமிழ்நாடு (17), ஆந்திரா (12), உத்தராகண்ட் (12), கர்நாடகா (5) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றனர்.