கொழும்பு: சுற்றுலாவை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் 40 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கவுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்தார்.
‘ஹோட்டல் ஷோ கொழும்பு 2025’ தொடக்க விழாவின் போது உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத், “தற்போதைய நிலவரப்படி, இந்தியா உட்பட ஏழு நாடுகள் மட்டுமே இலங்கையில் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கப்பட்டன. அந்தப் பட்டியலை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விசா கட்டண விலக்கு காரணமாக இலங்கை அரசு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பை சந்திக்கும். ஆனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் ஏற்படும் மறைமுக பொருளாதார நன்மைகள், இழப்பை விட அதிகமாக இருக்கும்” என்றார்
இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, போலந்து, கஜகஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து, குவைத், நார்வே, துருக்கியே ஆகிய 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே உள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 7 நாடுகளும் இந்தப் பட்டியலில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன.