பா.ஶ்ரீகுமார்
சிறுகோள்களும் (Asteroids) சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை வெள்ளி, செவ்வாய், பூமி போன்ற கோள்களைவிட மிகச் சிறியதாக இருக்கும். சூரியக் குடும்பம் உருவானபோது அதிலிருந்து சிதறடிக்கப்பட்ட வான் பொருள்தான் சிறுகோள்கள். கோள்களைப் போல கோள வடிவத்தில் இவை காணப்படுவதில்லை, அளவுகளும் வேறுபடும்.
ஓர் உருளைக்கிழங்கு அளவில் இருந்து பல கிலோமீட்டர் விட்டம் கொண்ட (பெரிய டைட்டானிக் கப்பல் அளவு) சிறுகோள்கள் உள்ளன. இந்தச் சிறுகோள்களில் நிக்கல், இரும்பு ஆகிய உலோகங்கள் அதிக அளவில் உள்ளன. சிறுகோள்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடைப்பட்ட பகுதியில் லட்சக்கணக்கில் காணப்படுகின்றன.
சிறுகோள்கள் நாள்
1908 ஜூன் 30இல் ரஷ்யாவின் மத்திய சைபீரியாவில் உள்ள யெனிசெய்ஸ்க் கவர்னரேட்டில் (இப்போது க்ராஸ்நோயார்ஸ்க் க்ராய் ) போட்கமென்னயா ’துங்கஸ்கா’ ஆற்றின் அருகே ஒரு நிகழ்வு நிகழ்ந்தது.
வானில் இருந்து மிகப் பெரியத் தீக்கோளம் வருவதை மக்கள் பார்த்தனர். அது வெடித்தபோது நூற்றுக்கணக்கான மைல்கள் வரை பேரோசைக் கேட்டது. 2000 சதுர கி.மீ. அளவில் சுற்றுவட்டாரமே எரிந்தது. அதனால் ஏற்பட்ட அதிர்வு மட்டும் இந்தப் பூமியை இரண்டு முறை சுற்றிவந்தது என்று ஆய்வாளர்கள் கூறினர். அதன் வெளிச்சம் ஐரோப்பா முழுவதும் இரவைப் பகலாக்கியது. 10 லட்சம் டன் எடையும், ஒரு கால்பந்து மைதான அளவும் கொண்டது அந்த விண்கல். இந்த விண்கல் வெடிப்பின் ஆற்றல் 15 மெகா டன் டிஎன்டியின் வெடிக்கும் ஆற்றலுக்குச் சமமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6, 1945 அன்று அமெரிக்காவால், ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு ஆற்றல் வாய்ந்தது.
விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோள் ஒருவேளை 50-100 மீட்டர் (150-300 அடி) விட்டம் மற்றும் ஒரு கல் அல்லது கார்பனேசிய கலவையைக் கொண்ட சிறிய கோளாக இருந்திருக்கும் என்று கருதுகின்றனர். பூமியின் மேற்பரப்பிற்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் பொருள் வெடித்ததால், அது நெருப்புக்கோளத்தையும் வெடிப்பு அலையையும் உருவாக்கியது.
மணிக்கு 1 லட்சத்து 13 ஆயிரம் கி.மீ. வேகத்தில் அந்தப் பெரிய கல் பூமியின் மீது மோதிய அந்தச் சம்பவம் ‘துங்கஸ்கா நிகழ்வு’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளை நினைவுபடுத்தும் விதத்தில் 2015ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் சர்வதேச சிறு கோள்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
சுற்றி வரும் சிறு கோள்கள்
ஆயிரக்கணக்கான சிறு கோள்கள் பூமிக்கு அருகிலும் (பல லட்சக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு) சுற்றி வருகின்றன. இந்தச் சிறு கோள்களில் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் காணப்படுகின்றன. சில சிறு கோள்களில் தண்ணீரும் காணப்படுகிறது.
ஒரு சிறு கோளுக்கும் இன்னொரு சிறு கோளுக்கும் இடையிலான தொலைவு என்பது சுமார் 9,66,000 கி.மீ. இந்தத் தொலைவானது பூமிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள தொலைவைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம்.
சிறுகோள்கள் ஒரு கிலோமீட்டர் அகலம் உடையவை. இவை செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே அதிக அளவில் காணப்படுகின்றன. இதனை ’சிறுகோள் பட்டைகள்’ என்று அழைக்கின்றனர்.
சில சிறுகோள்களின் வெப்பநிலை மைனஸ் 73 டிகிரி செல்சியஸ் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுகோள்களில் இருக்கும் உலோகங்களை பூமிக்குக் கொண்டு வருவதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறுகோள்களில் சுரங்கப் பணிகளை நடத்துவதற்காக விண்கலங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன . அங்கிருந்து எடுக்கப்படும் உலோகங்களை பூமிக்குக் கொண்டு வருவதற்கு தேவையான தொழில்நுட்பங்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சில சிறுகோள்களுக்கு விண்கலங்கள் மூலம் ரோபாட்டுகளை அனுப்பி ஆய்வுகள் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சில சிறுகோள்கள் கோள்களின் சுற்றுப்பாதையைக் கடந்து செல்லும். இது குறித்து ஆய்வு செய்யும் போது, சூரியக் குடும்பத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை விஞ்ஞானிகளால் கண்டறிய முடியும். சிறுகோள் பட்டையில் இதுவரை எண்ணப்பட்டுள்ள சிறுகோள்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம்.
வளிமண்டலம் என்கிற ஒன்று பூமியைக் காப்பதால்தான் பெரும்பாலான அபாயங்கள் நிகழாமல் இந்த விண்கற்களின் தாக்குதலில் இருந்து பூமி தப்பிவருகிறது. இருந்தாலும் பூமியைச் சுற்றி நாம் செலுத்தும் செயற்கைக்கோள்கள் இந்த விண்கற்களால் தாக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
சிறு கோள்களில் ஆய்வு
OSIRIS-REx என்கிற ஆய்வுத் திட்டம் சிறுகோளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து சிறிய கேப்சூல் மூலம் பூமிக்குக் கொண்டு வருவதாகும். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று அட்லஸ் 5 411, ஏவி-067 என்கிற ஏவுகலன் சிறுகோளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.
2023 செப்டம்பர் 24 அன்று, பூமிக்கு அருகில் பறக்கும் போது விண்கலம் பென்னுவிலிருந்து சேகரித்து வைத்திருந்த அந்த மாதிரியை, பூமிக்கு அனுப்பும் கலத்தை வெளியேற்றியது. இக்கலம் பூமிக்கு வான்குடை (Parachute) மூலம் அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு சூரியக் குடும்பத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, ஆரம்பக் கட்டக் கோள் உருவாக்கம், புவியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் கரிமச் சேர்மங்களின் மூலம் ஆகியவற்றைக் கண்டறியும் முயற்சியாகும்.
டர்ட் – DART
பூமியை நோக்கி வரும் சிறுகோள்/விண்கல்லை செயற்கைக்கோள் மூலம் தாக்குதல் நடத்தி அதன் திசையைத் திருப்பி, பூமியைக் காப்பது என்கிற திட்டம் வெற்றியடைந்துள்ளது. விண்கல்லை உடைப்பதைக் காட்டிலும் அதன் சுற்றுப்பாதைதைத் திசைதிருப்புவது மிக முக்கியம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
24 நவம்பர் 2021 அன்று ஏவப்பட்ட DART விண்கலம், 26 செப்டம்பர் 2022 அன்று மணிக்கு, பூமியிலிருந்து சுமார் 110 கோடி கி.மீ. தொலைவில் Dimorphos என்கிற சிறுகோள் மீது வெற்றிகரமாக மோதியது. மோதல் டிமார்போஸின் சுற்றுப் பாதையை 32 நிமிடங்கள் சுருக்கியது,
பூமியை நோக்கி ஒரு விண்கல் வரும் வரை காத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான் பூமிக்கு அருகில் உள்ள வேறு ஒரு விண்கல்லை மோதி நாசா சோதனை செய்தது. இந்தச் சோதனையில் முதல்கட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.
30 ஜூன்: சர்வதேச சிறுகோள்கள் நாள்