அக்ரா: ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அதிபர் ஜான் டிராமணி மஹாமா, கானா மக்கள் மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரையில் கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா என ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இதன்படி அவர் புதன்கிழமை மாலை ஆப்பிரிக்க தேசமான கானாவை அடைந்தார். இந்த பயணத்தில் கானா மற்றும் இந்தியாவுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மேலும், பிரதமர் மோடி வியாழக்கிழமை (ஜூலை 3) அன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அங்கிருந்து டிரினிடாட் & டொபாகோ செல்கிறார்.
பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி விமானம் மூலம் கானா சென்றடைந்தார். அங்கு அந்நாட்டின் அதிபர் ஜான் டிராமணி மஹாமா, கானா அரசு மற்றும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி கானாவில் வசித்து வரும் புலம்பெயர் இந்திய மக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பரதநாட்டிய கலைஞர்கள் சிலர் பரதம் ஆடி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடி கானாவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி தருவதாக அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் தெரிவித்துள்ளனர்.