அந்த வகையில், அமெரிக்க அதிபர்கள் வரிசையில் கடைசியாக ட்ரம்ப்பும் நேற்று மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஓர் அடிப்படை மாற்றம் வர வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினார். “பயங்கரவாதமும், மரணங்களும் முற்றுப்பெறும் தருணம். மாறாக நம்பிக்கையும், இறையருளும் தொடங்கும் காலம். இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு நீடித்த நல்லிணக்கத்தின் தொடக்கக் காலம். இது விரைவில் பிரம்மாண்டமான பிராந்தியமாகும் என்பதை நான் வலுவாக நம்புகிறேன். புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்” என்று மத்திய கிழக்கின் புதிய முகத்தைப் பற்றிப் பேசினார்.
அவரது பேச்சு நெடுகிலுமே, காசா அமைதி ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலவும் சிக்கல்களுக்குமான தீர்வு என்ற தொனியிலேயே இருந்தது. ஆனால், ‘பாலஸ்தீனர்களின் நில உரிமை மீட்கப்படும் வரை, இஸ்ரேல் அவர்களின் நிலத்தை கட்டுப்படுத்தும் வரை நீடித்த அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் வாய்ப்பில்லை’ என்கின்றனர் பாலஸ்தீன உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர்கள்.

