அக்ரா: அரசுமுறை பயணமாக கானா நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7-ம் தேதிகளில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க செல்லும் வழியில் கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதல்கட்டமாக, மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தலைநகர் அக்ராவுக்கு பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி சென்றார். கானா அதிபர் ஜான் டிராமணி மகாமாவை அவர் நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே கலாச்சாரம், தரநிலை சான்று, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:
30 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கானாவுக்கு வந்துள்ள இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. அதிபரே விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்றது நெகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா, கானா நாடுகளின் சுதந்திர போராட்டம் பல்வேறு நாடுகளின் விடுதலைக்கு வித்திட்டது. கானாவை கட்டியெழுப்பும் பயணத்தில் இந்தியா ஆதரவாளராக மட்டுமின்றி, சக பயணியாகவும் இருக்கும். இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. இந்திய நிறுவனங்கள் கானாவின் 900 திட்டங்களில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும். கானாவுடன் யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. கானாவுக்கான உதவித் தொகைகளை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம். கானா இளைஞர்களின் தொழிற்கல்விக்காக திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படும். ‘பீட் கானா’ என்ற வேளாண் திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். மக்கள் மருந்தகங்கள் மூலம் கானா மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
ராணுவ பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு, ராணுவ தளவாடங்கள், இணையதள பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும். கனிமங்களை ஆராய்வது, சுரங்கங்கள் அமைப்பதற்கு இந்திய நிறுவனங்கள் முழு ஆதரவு அளிக்கும். கானாவின் மரபுசாரா எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும். பல ஆண்டுகளாக, இந்திய ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் கானாவில் பணியாற்றி வருகின்றனர். கானாவின் பொருளாதார, சமூக முன்னேற்றத்துக்கு இந்திய சமூகம் பங்களித்து வருகிறது. இந்தியாவுக்கு வருகை தருமாறு கானா அதிபருக்கு அழைப்பு விடுக்கிறேன்.இவ்வாறு மோடி பேசினார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் கரோனா தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. அந்த இக்கட்டான நேரத்தில், கானாவுக்கு 6 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பிவைத்தது. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் இரு நாட்டு வர்த்தகம் அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. கானாவின் பல்வேறு திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கானா நாட்டின் மிக உயரிய ‘ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்’ விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா நேற்று வழங்கினார். கானா நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தனிநபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
‘கானா நாட்டின் உயரிய விருது எனக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக இதை ஏற்றுக் கொள்கிறேன். இதன்மூலம் எனது பொறுப்பு அதிகரித்துள்ளதாக உணர்கிறேன்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கானா நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியபோது, ‘‘ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக திகழ்கிறது. விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். வளமான, நிலையான உலகத்தை படைக்க வலுவான இந்தியா முக்கிய பங்களிக்கும். இது தொழில்நுட்ப புரட்சியுகம். இதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கிய ‘குளோபல் சவுத்’ நாடுகளின் செல்வாக்கு சர்வதேச அரங்கில் அதிகரித்து வருகிறது’’ என்றார்.
இந்திய வம்சாவளியினருடன்.. கானா தலைநகர் அக்ராவில் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இரு நாடுகளுக்கும் நட்பு பாலமாக இந்திய வம்சாவளியினர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கானாவில் வசிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிபர் மகாமாவுக்கு நன்றி தெரிவித்தார். கானா பயணத்தை முடித்துக்கொண்டு, டிரினிடாட் அன்ட் டொபாகோ நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினுக்கு பிரதமர் மோடி நேற்று புறப்பட்டார்.