வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்வதாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லர், “இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியுதவி செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ட்ரம்ப் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா அடிப்படையில் சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள்.” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்தபோதிலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவது குறித்து இந்தியா இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்திய அரசாங்க வட்டாரங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி தொடரும் என்று தெரிவித்தன.
ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ரஷ்யா உக்ரைனுடன் சமாதான ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரிகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி வேகமாக வளர்ந்துள்ளது. 2021-ல் உக்ரைன் போருக்கு முன்பு, ரஷ்யாவிடமிருந்து 3% மட்டுமே எண்ணெய் வாங்கிய இந்தியா, தற்போது 35% முதல் 40% வரை எண்ணெய் வாங்கி வருகிறது.