கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலை மாதம் பதவி விலகினார். அவரது எஞ்சிய பதவிக் காலத்தில் ரணில் அதிபராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பர் வரை அவர் அதிபராக பதவி வகித்தார். இவர் 5 முறை இலங்கை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், ரணில் அதிபராக இருந்தபோது, தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்துக்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வு துறை (சிஐடி) போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ரணில் விக்ரம சிங்கே கடந்த 2023 செப்டம்பரில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கேவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றார். இதற்கு பொது நிதியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நாங்கள் அவரை கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தனர்.
கியூபா தலைநகர் ஹவானாவில் கடந்த 2023-ல் நடைபெற்ற ஜி77 உச்சி மாநாட்டில் ரணில் கலந்துகொண்டார். அவர் இலங்கை திரும்பும் வழியில் இங்கிலாந்து சென்றார். லண்டனில் தங்கிய அவர் தனது மனைவி மைத்ரியுடன் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்நிலையில், தனது மனைவியின் பயணச் செலவுகளை தானே ஏற்றுக்கொண்டதாகவும், அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் ரணில் கூறிவந்தார். எனினும், ரணில் தனிப்பட்ட பயணத்துக்காக அரசுப் பணத்தை பயன்படுத்தியதாகவும், அவரது மெய்க்காவலர்களுக்கும் அரசே பணம் கொடுத்துள்ளதாகவும் சிஐடி குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது ரணில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.