நியூயார்க்: இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அதிபருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய முதலில் 25% வரி விதித்தார். பின்னர், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25% வரியை விதித்தார். இதனால், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை.
அமெரிக்கா உடனான உறவில் பின்னடைவு ஏற்பட்டால் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடனான தனது நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் என அமெரிக்க அரசியல் நோக்கர்கள் அதிபர் ட்ரம்ப்பை எச்சரித்து வந்தனர். சமீபத்தில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு அதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா – இந்தியா கூட்டமைப்பின் இணை தலைவருமான ரோ கன்னா, “இந்தியாவுடனான அமெரிக்காவின் நல்லுறவை அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது. அமெரிக்க-இந்திய உறவை வலுப்படுத்த கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு பணிகளை ட்ரம்ப்பின் நடவடிக்கை குறைமதிப்புக்கு உட்படுத்துவதாக உள்ளது. ட்ரம்ப்பின் கொள்கைகள், இந்தியாவை சீனா மற்றம் ரஷ்யாவை நோக்கி நகர்த்துகிறது. இது அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடு சீனாதான். ஆனால், சீனாவுக்கான இறக்குமதி வரியைவிட, இந்தியா மீதான இறக்குமதி வரி அதிகமாக உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் தோல் மற்றும் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க உற்பத்தியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கிறது.
ட்ரம்ப்பின் முடிவுக்கு காரணம் என்ன?: இந்தியா மீது ட்ரம்ப் அதிக வரி விதித்ததற்கான காரணம் மிகவும் எளிமையானது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்ட பிறகு, அதற்கு தான்தான் காரணம் என ட்ரம்ப் உரிமை கோரினார். இதை பாகிஸ்தான் அரசும் ஆதரித்தது. ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவும் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால், இந்த விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை என்று இந்தியா தெரிவித்தது. ட்ரம்ப்பின் உரிமை கோரலுக்கு இந்தியா வலு சேர்க்க மறுத்துவிட்டது.
இந்தியா உடனான மூலோபாய உறவை ட்ரம்ப்பன் ஈகோ அழிக்க அனுமதிக்க முடியாது. ஏனெனில், அமெரிக்கா உலகை வழிநடத்த இது மிகவும் முக்கியமாகும். இல்லாவிட்டால், அந்த இடத்தை சீனா கைப்பற்றும்.