மாஸ்கோ: இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் வர்த்தக அழுத்தத்தை சட்டப்பூர்வமானது என தாங்கள் கருதவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, தான் சந்திக்கும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்டும் நோக்கில் தன்னிடம் உள்ள கச்சா எண்ணெயை ரஷ்யா குறைந்த விலைக்கு விற்கிறது.
ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளிடம் கூடுதல் கச்சா எண்ணெயை வாங்கி வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான வரியை 25% ஆக உயர்த்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், “ரஷ்யா உடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க பல நாடுகளை அமெரிக்கா கட்டாயப்படுத்துகிறது என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். உண்மையில் அச்சுறுத்தல்களை அமெரிக்கா வழங்குகிறது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என நாங்கள் கருதவில்லை. இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு தங்கள் வர்த்தக கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். எனினும், போர் குறித்த தங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.