காபூல்: ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் குணார் மாகாணம் ஜலாலாபாத் அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கனின் கிராமங்கள், பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. ஜலாலாபாத்துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்தில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குணார் மாகாணத்தின் நூர் கால், சாவ்கி, வாட்பூர், மனோகி மற்றும் சபா தாரா பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் நொறுங்கியதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் முதல் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சில நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கத்தில் பல கிராமங்கள் இருந்த வீடுகள், பல மாடி கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக சரிந்துள்ளன.
நிலநடுக்க பாதிப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆப்கனிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், “குணார் மாகாணத்தின் நுர்கல், சவ்கே, சாபா தாரா, பெச் தாரா, வாடாபூர், அசதாபாத் மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,124 ஆக உள்ளது. 5,412 வீடுகள் இடிந்துள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத இடங்களில் கமாண்டோ படைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.