பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்பினால், அவர் காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறினார்.
நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மேக்ரான், “காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் ட்ரம்ப்புக்கு மட்டுமே உள்ளது. இந்த மோதலில் ஏதாவது செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே.
அவர் எங்களை விட இப்போரை நிறுத்த அதிகமாக செய்ய முடிவதற்கான காரணம் என்னவென்றால், காசாவில் போரை நடத்துவதற்கான ஆயுதங்களை நாங்கள் வழங்குவதில்லை, அமெரிக்காதான் வழங்குகிறது.
ஐநா பொதுசபையில் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில், ‘எனக்கு அமைதி வேண்டும். ஏழு மோதல்களை நிறுத்தினேன்’ என மீண்டும் பேசியுள்ளார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்றால், காசாவில் நடக்கும் போரை நிறுத்தினால் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசு சாத்தியமாகும்” என்று மேக்ரான் கூறினார்.
கம்போடியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் போர்நிறுத்தங்களை உருவாக்கியதற்காக ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளன.
நேற்று (செப்.23) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பேசிய ட்ரம்ப், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளை நிராகரித்தார், அது ஹமாஸ் போராளிகளுக்கு ஒரு வெகுமதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். “காசாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கு உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என்று அவர் கூறினார்.