வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் இது அரசியில் ரீதியாக பேசு பொருளானது. “இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவு,” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.
“அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்தது. இதில் அமெரிக்காவின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது?” என அந்த ட்வீட்டில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
“தவறான தகவல்களை பரப்புகிறார், தேசத்தின் வெளியுறவு கொள்கை சார்ந்து அவதூறு கருத்துகளை ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.” என பாஜக ஐடி பிரிவின் அமித் மாள்வியா மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் அதிகாரபூர்வ விளக்கம் தரப்பட்டுள்ளது. “இது தவறான தகவல். எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவர்களும் அமெரிக்க ராணுவ விழாவுக்கு அழைக்கப்படவில்லை.” என வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அமெரிக்க ராணுவ அணிவகுப்பு: பெரும்பாலான உலக நாடுகளில் ராணுவ அணிவகுப்பு என்பது ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் இந்த வழக்கம் இல்லை. கடைசியாக கடந்த 1991-ம் ஆண்டு வளைகுடா போர் வெற்றிக்கு பிறகு அங்கு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிலையில், 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அங்கு ராணுவ அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க ராணுவத்தின் அனைத்துவித படைகளும் அணிவகுத்தன. இதில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார்.