புதுடெல்லி: சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி கட்டிப்பிடித்து கைகுலுக்கியபோது, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ, இந்திய மற்றும் அமெரிக்காவின் உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “21-ம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்க இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுவானதாக மாறும். அதற்கான சாத்தியக்கூறுகள் நம்மை முன்னோக்கி நகர்த்தி வருவதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இருநாட்டு மக்களுக்கு இடையிலான நீடித்த நட்புதான் இந்தப் பயணத்தின் தூண்டுகோலாக அமைந்துள்ளது.
புதுமை, பாதுகாப்பு, தொழில்முனைவு என அனைத்திலும் எங்களது உறவு ஒன்றிணைந்துள்ளது” என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எஸ்சிஓ உச்சி மாநாட்டில் புதின் மற்றும் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவு செயலர் இந்த கருத்தை கூறியுள்ளது இந்தியா-அமெரிக்கா உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.