வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டா கிளாரா பகுதியில் இந்திய இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரை சேர்ந்தவர் முகமது நிசாமுதீன் (32). கடந்த 2016-ம் ஆண்டில் அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு புளோரிடாவில் உயர் கல்வி பயின்றார். பின்னர் கலிபோர்னியா மாகாணம், சாண்டா கிளாரா பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினீயராக அவர் பணியாற்றி வந்தார்.
அங்குள்ள வாடகை வீட்டில் முகமது நிசாமுதீனும் மற்றொரு நபரும் தங்கியிருந்தனர். கடந்த 3-ம் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ்பபோது நிசாமுதீன், சக நண்பரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீஸார், முகமது நிசாமுதீனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து நிசாமுதீனின் தந்தை ஹஸ்னுதீன் கூறியதாவது: எனது மகன் நிசாமுதீனை எவ்வித விசாரணையும் இன்றி போலீஸார் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கடந்த இரு வாரங்களாக அமெரிக்க போலீஸார் எங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. வெள்ளிக்கிழமை காலையில்தான் மகன் உயிரிழந்தது தெரியவந்தது.
எனது மகனின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத் துறையின் உதவியை நாடி உள்ளேன். இவ்வாறு ஹஸ்னுதீன் தெரிவித்தார். இதுகுறித்து சாண்டா கிளாரா போலீஸார் கூறும்போது, “நிசாமுதீன் தனது சக நண்பரை கத்தியால் கொடூரமாக குத்தினார். அவரை தடுத்து நிறுத்தவே போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். போலீஸ் தரப்பில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்தனர்.