ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெயர் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
இது குறித்து பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் குறித்து மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு தீவிர கவலைகளை அளிப்பதாகவும், அவை உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தகம் குறையவும், விநியோகச் சங்கிலிகள் சீர்குலையவும், நிச்சயமற்ற தன்மை ஏற்படவும் இவை வழிவகுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2035 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5%-ஐ ராணுவ செலவினங்களுக்கு கூடுதலாகச் செலவிடுவது என்ற நேட்டோ நாடுகளின் முடிவை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கடுமையாக விமர்சித்தார். சமாதானத்துக்காக செலவிடுவதைவிட போருக்காக செலவிடுவது எப்போதுமே எளிதானது என்று அவர் விமர்சித்தார்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், அந்த தீர்மானத்தில் இஸ்ரேல் பெயரோ, அமெரிக்காவின் பெயரோ இடம்பெறவில்லை. காசாவில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தீவிர கவலையை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரிக்ஸ் நாடுகள், பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளையும் அங்கீகரிப்பதே பிரச்சினைக்குத் தீர்வு என்றும் பிரிக்ஸ் யோசனை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான தீர்மானத்தில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பிரிக்ஸ் மாநாடு குறித்து… – பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று ‘சர்வதேச அமைதி, பாதுகாப்பு, சீர்திருத்தம், நிர்வாகம்’ குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டின் 2-ம் நாளான இன்று சர்வதேச சுற்றுச்சூழல், சுகாதாரம் குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதிலும் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்து கொள்ளவில்லை. மாறாக, அவர் காணொலி காட்சி வாயிலாக மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அதேபோல், இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்க அரசு அதிக வரிகளை விதித்துள்ளது. இதுபற்றி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.