வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே கடந்த மாதம் கருத்து முரண் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
“அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் கீழ் தான் வாழ்கிறோம் என்பது தெரிகிறது” என தனது எக்ஸ் தளத்தில் மஸ்க் கூறியுள்ளார்.
முன்னதாக, எக்ஸ் தளத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தன்று (ஜூலை 4) ‘அமெரிக்க கட்சி’ என்ற புதிய கட்சி தொடங்குவது குறித்து மஸ்க் கேள்வி எழுப்பி இருந்தார். ‘யெஸ்’ அல்லது ‘நோ’ பாணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயில் சுமார் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் பங்கேற்றனர். அதில் 65 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்தனர்.
இதையடுத்து, “இரண்டில் ஒருவருக்கு புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என கூறியுள்ளனர். அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்” என சனிக்கிழமை அன்று மஸ்க் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், சொன்னபடி அமெரிக்க கட்சியை தொடங்கி உள்ளார். டொனால்டு ட்ரம்ப் அரசு முன்மொழிந்த ‘பிரமாண்டமான பட்ஜெட்; அழகான பட்ஜெட்’ என்ற மசோதா அமலுக்கு வந்த மறுநாளே அரசியல் கட்சி தொடங்குவேன் என மஸ்க் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதா அண்மையில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
மஸ்க் vs ட்ரம்ப் – நடந்தது என்ன? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் செயல்திறன் துறையை (டிஓஜிஇ – DOGE) தொழிலதிபர் எலான் மஸ்க் கவனித்து வந்தார். ஆனால், அவரது துறையின் பரிந்துரைகள் அமெரிக்க அரசின் பட்ஜெட் மசோதாவில் இடம்பெறவில்லை. மாறாக அதில் வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவத்துக்கு கூடுதல் நிதி, மின் வாகனங்களுக்கான மானியம் ரத்து போன்றவை இடம் பெற்றிருந்தன. இதனால் ஏமாற்றம் அடைந்த எலான் மஸ்க் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார்.
பரஸ்பர தாக்கு: அதன்பின் அதிபர் ட்ரம்ப் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கத் தொடங்கினார். “மிகப் பெரிய அருமையான பட்ஜெட்” என கிண்டலடித்த எலான் மஸ்க், பின்னர் இது அருவறுப்பான பட்ஜெட் எனவும் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து பொறுப்பை துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஊடகத்தில் ஒருவர் தெரிவித்த கருத்துக்கும் ‘ஆமாம்’ என எலான் மஸ்க் பதிவிட்டார்.
“எலான் மஸ்க் நிறுவனங்களுடனான அமெரிக்க அரசின் ஒப்பந்தத்தையும், மானியத்தையும் நிறுத்தினால், அமெரிக்க பட்ஜெட்டில் பல லட்சம் கோடி மிச்சமாகும்” என அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து “அதிபர் ட்ரம்ப் நன்றி கெட்டவர். நான் ஆதரவு அளிக்கவில்லை என்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஜெயித்திருக்க முடியாது” என எலான் மஸ்க் கூறினார்.
மேலும், சட்டவிரோத பாலியல் வழக்கில் சிக்கி தற்கொலை செய்துகொண்ட ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அதிபர் ட்ரம்ப்புக்கு தொடர்பு உள்ளது எனக் கூறி அவருடன், ட்ரம்ப் இருக்கும் பழைய வீடியோ ஒன்றையும் எலான் மஸ்க் பகிர்ந்தார். இதனால் எலான் மஸ்க் மீது வெறுப்படைந்த அதிபர் ட்ரம்ப், “இனிமேல் எலான் மஸ்க் உடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை” எனக் கூறினார்.
இதையடுத்து, திடீர் திருப்பமாக எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “அதிபர் ட்ரம்ப் பற்றி கொஞ்சம் அதிகமாக விமர்சித்து விட்டேன், வருந்துகிறேன்” என தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொள்வது போல், “மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் “கடையை மூடிவிட்டு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்ப செல்ல நேரிடும். வரலாற்றில் அதிக மானியங்களை பெற்ற மனிதர்தான் மஸ்க்” என குறிப்பிட்டிருந்தார். அரசின் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் மஸ்க்கின் நிறுவனங்கள் சரிவை சந்தித்திருக்கும். விண்கலன் ஏவுதல், செயற்கைக்கோள்களை நிறுவுதல் மற்றும் மின்சார கார் உற்பத்தி போன்றவை எப்போதோ முடிவுக்கு வந்து இருக்கும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
மஸ்க் எதிர்வினை: “அனைத்தையும் இப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள் என நான் சொல்கிறேன். ட்ரம்ப்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாள் அமெரிக்க மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிக்கு மாற்றாக ‘அமெரிக்கா கட்சி’ தொடங்கப்படும்” என மஸ்க் அப்போது சொல்லியிருந்தார்.