வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அடுத்த வாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அந்த பிரதேசத்தில் மூன்றரை ஆண்டுகளாக சண்டை நடைபெற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நிறைய ரஷ்யர்கள் உயிரிழந்துவிட்டனர். நிறைய உக்ரேனியர்களும் உயிரிழந்துவிட்டனர். இந்த பிரச்சினை மிகவும் சிக்கலானது. நாங்கள் சிலவற்றை திரும்பப் பெறப் போகிறோம். சிலவற்றை மாற்றப் போகிறோம். இருவரின் நன்மைக்காகவும் சில பிரதேசங்களை மாற்றுவோம்.
அமைதியைக் காண ஐரோப்பிய தலைவர்கள் விரும்புகிறார்கள், அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் விரும்புகிறார்கள் என்றே நம்புகிறேன். அதிபர் ஜெலன்ஸ்கி இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட தயாராக இருப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாட்டுக்க எதிராக கூடுதல் தடைகள் விதிக்கப்படும். அதை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக இருக்க வேண்டும்” என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதேவேளையல், போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் தனது பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ட்ரம்ப் கூறி இருந்தார். இந்த பின்னணியில், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை ரஷ்ய செய்தித் தொடர்பாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார். ரஷ்யாவுக்கு அருகில் இருப்பதால் அலாஸ்கா பொருத்தமான இடம் என்று அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா மற்றும் ரஷ்யா கைப்பற்றியுள்ள டான்பாஸ் ஆகிய பகுதிகள் ரஷ்யா வசம் இருக்கும் என்றும், ரஷ்யா ஓரளவு கைப்பற்றியுள்ள கெர்சன், சபோரிஷியா பகுதிகளை அது உக்ரைனக்கு விட்டுக்கொடுக்கும் என்றும், இதற்கேற்ப ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலையில், உக்ரைனின் 20% நிலப்பரப்பை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
“நேட்டோவில் இணைவது என்ற தனது விருப்பத்தை உக்ரைன் கைவிட வேண்டும், அது பொதுவான நாடாக இருக்க வேண்டும், அது தனது ராணுவ பலத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகள் விலக்கப்பட வேண்டும், ரஷ்யாவின் தென்கிழக்கில் அது ஆக்கிரமித்துள்ள உக்ரைனின் பகுதிகளில் இருந்து உக்ரைன் ராணுவம் வெளியேற வேண்டும்” உள்ளிட்ட நிபந்தனைகளை ரஷ்யா விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 3 முறை நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. எனினும், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்யாவின் நிபந்தனைகள், சரணாகதி அடைவதற்கு ஈடானது என உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் கருதுகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீதான முழு அளவிலான போரை ரஷ்யா தொடங்கிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை முதன்முறையாக சந்தித்துப் பேச உள்ளார். கடந்த பிப்ரவரியில் ட்ரம்ப்பும், புடினும் தொலைபேசியில் பேசிய நிலையில், இந்த சந்திப்பு நிகழ இருக்கிறது.