அசுரர்கள் சும்பன், நிசும்பன் ஆகியோர் தேவர்களுக்கு இன்னல்கள் விளைவித்து, அவர்களை வெற்றி கண்டனர். இவர்களின் அழிவுகாலத்தில் ஆதிபராசக்தியிடம் இருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு முப்பெரும் தேவியின் வடிவமாகத் திகழும் அஷ்ட மாதர்கள் அஷ்டராத்திரிகளாகத் தோன்றினர்.
பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை, கமண்டலத்துடன் தோன்றினாள். வைஷ்ணவி என்ற விஷ்ணு சக்தி கருட வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலருடன் தோன்றினாள்.
இப்படியே மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திருசூலம், வரமுத்திரையுடனும், கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மயூர வாகனத்தில் வேலாயுதத்துடனும், மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயுதத்துடனும், வாராஹி என்ற வாராஹியுடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் தோன்றினர்.
மேலும், சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியுடனும், நரசிம்ஹி என்ற நரசிம்ஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினர். இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர்.
இந்த நவராத்திரி தேவியர் சும்ப – நிசும்பர்களை அழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகி அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றித் துதித்தனர்.
மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்படும் ராஜ ராஜேஸ்வரி வடிவத்தை வணங்குவதால் நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெருகும். 3 வயது சிறுமியை கவுமாரியாக நினைத்து பூஜிக்க வேண்டும். புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து கல்யாணி, பெஹாக் ராகங்களில் பாடல்கள் பாடி, முல்லை, துளசி, மஞ்சள் நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.