சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் விடையாற்றி விழாவில் சந்தீப் நாராயண் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் கடந்த 9-ம் தேதியும், அறுபத்து மூவர் விழா 10-ம் தேதியும் நடைபெற்றன.
இதன்பிறகு, 14-ம் தேதி விடையாற்றி தொடங்கியது. இதில், இசை, நாட்டியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 20-ம் தேதி பிரபல கர்னாடக இசைக் கலைஞர் சந்தீப் நாராயண் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அனந்த கிருஷ்ணன் (வயலின்), நெய்வேலி வெங்கடேஷ் (மிருதங்கம்), அனிருத் ஆத்ரேயா (கஞ்சிரா)ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.
பாபநாசம் சிவன் கிருதிகள்: இந்த நிகழ்ச்சியில், ‘வருவாரோ வரம் தருவாரோ’, ‘இன்பம்வந்தாலும் என்ன துன்பம் வந்தாலும்’, ‘காரணம் கேட்டு வாடி சகி’மற்றும் மயிலை கபாலீஸ்வரர் மீதுபாபநாசம் சிவன் பாடியிருக்கும்அரிய கிருதிகளான ‘கருணாகரனே சிவசங்கரனே’, ‘கபாலி கருணை நிலவு பொழியும் வதனம்’ என்பது உள்ளிட்ட இறை அனுபூதியுடன் கூடிய பாடல்களை சந்தீப் நாராயண் பாடினார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் உற்சாகத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். விடையாற்றி விழா 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.