இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர்.
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மடாதிபதிகள், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்தும் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தர உள்ளனர். திருப்பரங்குன்றம் மலைக் கோயில் வடிவத்தில் மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலையிலேயே பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர், ஆன்மிக அமைப்பினர் வாகனங்களில் மதுரைக்கு வரத் தொடங்கிவிட்டனர். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை மாநாட்டு வளாகத்துக்கு வந்தார். அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.பின்னர் அவர் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் தரிசனம் செய்தார். மாநாட்டு திடலில் கூடியிருந்த பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் கூறியதாவது: தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்கிறோம். அந்த சிவனின் குழந்தை முருகப் பெருமான். அவர் நமது கலாச்சாரத்தின், பண்பாட்டின் அடையாளம். நான் அறுபடை வீடுகளுக்கும் நேரில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துள்ளேன். இங்கு அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதை ஒருங்கிணைத்த இந்து முன்னணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.