திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றுடன் நேற்று தொடங்கியது. பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, சண்டிகேசுவரர் சந்நிதியில் இருந்து கொடி புறப்பாடாகி, கோயிலை வலம் வந்தது.தொடர்ந்து, கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், சண்டிகேசுவரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்துக்கும், மூஞ்சூறு வாகனம் வரையப்பட்ட கொடிப்படத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் காலையில் வெள்ளிக் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.
ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை சூரனை விநாயகர் வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம், 26-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு மூலவருக்கு முக்குறுணி மோதகம் படையலிடப்படும். இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.