திருப்பதி: திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று வரலட்சுமி விரத விழா கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, கோயில் மாட வீதிகள் முழுவதும் வண்ண கோலங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தாயார் கோயிலில் இன்று காலை தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
காலை 10 மணி முதல் 12 மணி வரை பெண் பக்தர்கள் பங்கேற்கும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்று தீர்ந்து விட்டன. இக்கோயில் மட்டுமின்றி, திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் 51 கோயில்களிலும் இன்று பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், கங்கனம், வளையல்கள், அட்சதை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
வரலட்சுமி விரதத்தை யொட்டி, திருச்சானூரில் ஆண், பெண்களுக்கென தனித்தனி வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம், லட்டு பிரசாதத்தை தாராளமாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்புரவு தொழிலாளர்கள், ஸ்ரீவாரி சேவாவினர் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.