சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மே 17) தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நிறைவான உணவு வழங்க அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, கோயில்களில் ஒருவேளை அன்னதானம், நாள் முழுவதும் அன்னதானம், திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டுக்கு முன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 754 கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக 11 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 13 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 764 கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 3.5 கோடி பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
2025-2026 ஆம் நிதியாண்டுக்கான சட்டமன்ற அறிவிப்பில், “சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் துணை முதல்வர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் இன்று (மே 17) சனிக்கிழமை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனடிப்படையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் முழுவதும் அனைத்து நாட்களிலும், பார்த்தசாரதி சுவாமி திருத்தேரோட்டம், நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம், மாசிமகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 82 நாட்களில் வடை, பாயசத்துடன் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஆண்டொன்றுக்கு திருக்கோயிலுக்கு வருகை தரும் 82,000 பக்தர்கள் பயன்பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துறை செயலாளர்கள் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.