திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்ளார். அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்பர் வீதியுலா வருகிறார்.
செப்டம்பர் 25-ம் தேதி காலை சின்ன சேஷ வாகன சேவையும், இரவு அன்ன வாகன சேவையும் நடைபெற உள்ளன. 26-ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பல்லக்கு வாகனம், 27-ம் தேதி காலை கற்பக விருட்சக வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 28-ம் தேதி காலை மோகினி அலங்கார சேவை, இரவு கருடசேவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
6-ம் நாளான 29-ம் தேதி காலை அனுமன் வாகன சேவை, மாலை 4 மணிக்கு தங்க ரத ஊர்வலம், இரவு கஜ வாகன சேவை, 30-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை, அக்டோபர் 1-ம் தேதி காலை தேர்த்திருவிழா, இரவு குதிரை வாகன சேவை நடைபெற உள்ளது.
நிறைவு நாளான அக்டோபர் 2-ம்தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றிரவு 8.30 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெறும்.