தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.
அன்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்ட பின்னர், சுவாமி, அம்மனுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோயில் சேர்கிறார்.

