தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுபோல, அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன. வரும் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் ராஜகோபுரம் அருகே யாகசாலை அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
அறநிலையத்துறை ஆகம வல்லுநர் குழுவை சேர்ந்த பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆகம வல்லுநர் குழுவை சேர்ந்த செல்வம் பட்டர் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் மற்றும் பூமி பூஜைகள் செய்தனர். பின்னர் யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கோயில் தக்கார் அருள்முருகன், திருச்செந்தூர் நகராட்சித் தலைவர் சிவஆனந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.