திருப்பதி: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவிந்தராஜர் திருக்கோயிலில் கடந்த 2-ம் தேதி காலை பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி ஆகம சாஸ்திரங்களின்படி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-ம் தேதி இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் கோவிந்தரின் திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரம்மோற்வசத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தராஜ பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது, யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் மற்றும் பல்வேறு நடன கலைஞர்கள் நடனமாடியபடி முன்னால் சென்றனர். இதில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அன்ன வாகனத்தில் கோவிந்தர் எழுந்தருளினார்.