கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் நேற்று நடந்தது. ஜூலை 1-ம் தேதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்வும் நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் கோயிலில் அமைந்திருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற்றது.
உற்சவ ஆச்சாரியார் சிவ கைலாஷ் தீட்சிதர் கொடியேற்றி வைக்க, அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. இன்று (ஜூன் 24) முதல் 30-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து, தேர்த் திருவிழா ஜூலை 1-ம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமன் நடராஜ மூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். 2-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவ காமசுந்தரி சமேத ஸ்ரீமன்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.
அதன் பிறகு, காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பிறகு, பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும். 3-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.