தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16-ம் தேதி நடை திறக்கப்படுவதையொட்டி தரிசனத்துக்காக பக்தர்கள் ஆன்லைனில் மும்முரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி பூஜைக்காக கடந்த 29-ம் தேதி நடை திறக்கப்பட்டது. பின்பு 30-ம் தேதி ஒரு நாள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு நடை சாத்தப்பட்டது.
இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை தொடர் வழிபாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கின.
மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் பலரும் மாதாந்திர வழிபாடுகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தற்போது முன்பதிவுகள் மும்முரமாக நடக்கிறது.