திருநள்ளாறு: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும் தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மரபுபடி வாக்கிய பஞ்சாங்க முறையின்படியே சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இக்கோயிலில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகமும் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது என்பதாலும், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றுவோராக இருப்பதாலும், இன்று சனிக்கிழமை என்பதாலும் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை மிக அதிகளவில் இருந்தது.
கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளே இன்றும் நடைபெற்றன. சனிப்பெயர்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் வெளிப்புற பகுதியிலும், உள் பிரகாரங்களிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நளன் தீர்த்தக் குளத்திலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே புனிதநீராடி, நளன் கலி தீர்த்த விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த பின்னர், தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால் கோயிலில் வரிசைக்கான கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கூடுதலான எண்ணிகையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாசிக்க > மேஷம் முதல் மீனம் வரை: சனிப் பெயர்ச்சி பலன்கள் 2025