மதுரை: மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி எழுந்தருளினார்.
விழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, கருப்பணசாமி சந்நிதியில் உத்தரவு பெற்று, காலை 8 மணியளவில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.
காலை 8.40 மணியளவில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், அறநிலையத் துறை துணை ஆணையர் யக்ஞ நாராயணன் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷத்துடன் தேர் இழுத்தனர். வழியெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் 11.55 மணியளவில் தேர் நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தேரோட்டத்தையொட்டி மதுரை எஸ்.பி. அரவிந்த் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவில் பங்கேற்க சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர்.
விழா நாளை நிறைவு: மாலையில் ஆண்டுக்கொருமுறை பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் நடைபெறும் படி பூஜை, தீபாராதனை, சந்தனம் சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு புஷ்ப பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். இன்று தீர்த்தவாரி பூஜை நடைபெறுகிறது. நாளை உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது.