சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2025–26-ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றுக்கு மூத்த குடிமக்கள், ஒரே முறையாக சென்று தரிசனம் செய்யும் வகையில் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், 60 வயதுக்கு மேல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமானச் சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவச் சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
ஆன்மிகப் பயணத்துக்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்.15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.