ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா, இலங்கையை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடியை ஏற்றினார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், ராமேசுவரம் வேர்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழப்பாணம் முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை நடைபெற்றன. இரவில் புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. இந்த நிகழ்வுகளில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்கள் 3,424 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். இவர்கள் 78 விசைப்படகுகள், 22 நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டையும், மீன்வளத் துறையின் சார்பாக ‘லைப் ஜாக்கெட்’ வழங்கப்பட்டன. ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கச்சத்தீவுக்கு செல்லும் பக்தர்களின் படகுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மீன்வளத் துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேசுவரம் வட்டாட்சியர் அப்துல் ஜப்பார், கடலோர காவல் படை அதிகாரி வினய்குமார், சுங்கத் துறை துணை ஆணையர் பிரகாஷ் உடன் இருந்தனர்.
கச்சத்தீவு செல்லும் இந்திய யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக கடற்படையினர், கடலோரக் காவல் படையினர் மற்றும் தமிழக மெரைன் போலீஸார் ரோந்து படகுகளில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கச்சத்தீவில் நாளை காலை சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.