பழநி: உலக நன்மை வேண்டி பழநி முருகன் கோயிலில் ஐப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலையடிவாரத்தில் போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது. இங்கிருந்து சனிக்கிழமை (ஆக.9) காலை உலக நன்மை வேண்டி, ஶ்ரீலஶ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் 100 பேர், தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மேளம் தாளம் முழங்க, திருஆவினன்குடி குழந்தை வேலப்பர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து சென்றனர்.
அங்கு, முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத் தொடா்ந்து, பழநி மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக சென்ற அவர்கள், தண்டாயுதபாணி சுவாமி, போகர் ஜீவ சமாதியில் வழிபட்டனர். பின்னர், அடிவாரத்துக்கு வந்து புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.